Saturday, 28 October 2017

தொல்.திருமாவளவன் நமக்கானவராக தெரிவது ஏன்? - அ.தமீம் அன்சாரி


- அ. தமீம் அன்சாரி

வி.சி.கவை பொறுத்த வரை அது தலித்களுக்கான கட்சி என்று மட்டுமே பேசப்பட்ட நிலையில்
, திருமாவளவன் அதை மாற்றியமைத்தார். வி.சி.க தலித்களுக்கு மட்டுமான கட்சியல்ல. ஒட்டுமொத்த ஒடுக்கப்பட்டோருக்கான கட்சி என்று முஸ்லிம்களையும் பிற சிறுபான்மையினர்களையும் சேர்த்துக் கொண்டார். திருமாவளவனின் அரசியல் பார்வை விசாலமானது. ஒடுக்கப்பட்ட மக்களுக்கான உரிமையை மீட்டெடுப்பதையும் தமிழ் தேசியத்தையும் முக்கியமாக வைத்து அரசியல் செய்துக் கொண்டிருந்த திருமாவளவன், ஒரு கட்டத்தில் தொலை நோக்கு பார்வைக் கொண்ட அரசியலை கையிலெடுத்தார். ஒடுக்கப்பட்ட மக்களுக்கு மத்தியில் இருக்கும் பிரிவினைகளை உணர்ந்து அதை கையிலெடுத்து சரிசெய்தார். தலித்களுக்கும் முஸ்லிம்களுக்கும் மத்தியில் பிரிவை ஏற்படுத்த பாசிச அரசுகள் செய்த சூழ்ச்சிகளை புரிந்து, ஒரு குடையின் கீழ் அனைவரையும் ஒன்று சேர்த்தார்.

கடந்த கால வரலாற்றை எடுத்து பார்க்கும் போது தமிழகத்தில் நடந்த முக்கிய சம்பவங்கள் அனைத்திலும் திருமாவளவனின் குரல் முதல் குரலாகவும் வித்தியாசமாகவும் இருந்தது. ஸ்வாதியின் கொலையில் உள்ள மர்மங்கள் இன்றுவரை முடிவுக்கு வரவில்லை. அந்த மர்மங்களை கண்டுபிடித்துவிட்டால் முதலமைச்சரின் மரணத்திற்கான மர்மங்களும் வெளியில் வந்துவிடும் என்று பொதுத் தளத்தில் பேசுகிறார்கள்.

ஸ்வாதியின் கொலை வழக்கில் ஒரு முஸ்லிம்தான் கொன்றார். அதுவும் அவர் பெயர் மாலிக் என்று பிரபலங்கள் அதை திசை திருப்ப முயன்ற போது
, திருமாவளவன் தான் ஸ்வாதியின் கொலைக்கான பின்னணியில் இருந்த உண்மையான விஷயங்களை பொது விவாதத்திற்கு கொண்டு வந்தார். அதற்கு பிறகு தான் வழக்கின் போக்கு மாறியது. முக்கியக் கட்சி தலைவர்கள் பலரும் ஸ்வாதி விஷயத்தில் வாய் திறக்கவில்லை. ஆனால் எதிர்ப்புக் குரல் தெரிவித்ததோடு மட்டுமில்லாமல் ஆராயப்பட வேண்டிய முக்கிய விஷயங்களை பொது ஊடகத்தில் போட்டு உடைத்தது திருமாவளவன் மட்டும் தான்.

மெரீனா போராட்டம் முடிந்த போது ஏற்பட்ட கலவரத்தில் காவல் துறையின் வன்முறையை எதிர்த்து முதலில் களமிறங்கி போராடியவர்கள் விடுதலைச் சிறுத்தைகள். திருமாவளவன் நேரடியாக தெருவில் இறங்கி போராடினார். கலவரத்தின் உள்நோக்கத்தை வெளிச்சம் போட்டுக் காட்டினார்.

பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட தலித் சமூகத்தைச் சார்ந்த நந்தினிக்கு நியாயம் கேட்டு முதல் குரல் கொடுத்தவர் தொல்.திருமாவளவன்.

ஒட்டுமொத்த இந்தியாவும் அரசியல் தலைவர்களும் அப்துல் கலாம் மறைவையொட்டி அவருக்கான இறுதி அஞ்சலியை பார்த்துக் கொண்டிருந்தபோது அதே நாளில் இன்னொரு புறம் தூக்கிலிடப்பட்ட யாகூப் மேமனை மறந்துவிட்டார்கள்.
இந்தியாவின் மனசாட்சியை உலுக்கும் வகையில் யாகூப் மேமன் தூக்கிலிடப்பட்டிருக்கிறார். அதுவும் அவரது பிறந்த நாளில், மரண தண்டனையே ஒழிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தி வந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் அவர்களை அடக்கம் செய்யும் நாளில் நீதியின் பெயரால் இந்தப் படுகொலை நிகழ்த்தப்பட்டிருக்கிறது. இதை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறதுஎன்று முழங்கினார் திருமா.

வேலூர் ஷகீல் அஹ்மத்
, தர்மபுரி கலவரம் முதல் கௌரி லங்கேஷ் கொலை, தாஜ்மஹால் பிரச்னை, மெர்சல் சர்ச்சை வரை அனைத்திலும் கண்டனம் தெரிவிப்பதோடு மட்டுமல்லாமல் பிரச்சினையின் உண்மையான காரணத்தை பொதுத் தளத்தில் பதிவு செய்து மக்களின் கவனத்திற்கு கொண்டு வருபவர் திருமா.

ஒரு முறை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கூட்டத்தில் திருமாவளவன் பேசும்போது தொண்டர்களுக்கு அவர் அறிவுரை சொல்கிறார்:
நீங்கள் அனைவரும் மேடைகளில் பேசும் போது ஏனோ தானோவென்று எதிரியை அவன் இவன் என்று திட்டி பேசாதீர்கள். கொள்கைச் சார்ந்த அறிவோடு எதிரியை எதிர்க்கொள்ளுங்கள்என்று அறிவுரை சொல்கிறார்.

திருமாவளவனின் தலைமையிலான விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் அனைத்து முடிவுகளுக்கு பின்னாலும் ஒரு வரலாறு
, கொள்கை என்று தக்க காரணங்கள் இருப்பதைப் பார்க்க முடிகிறது. தமிழ் தேசியத்தை வலியுறுத்துபவர்கள் திராவிடத்தை எதிர்க்கிறார்கள். ஆனால் தமிழ் தேசியத்தை முதன்மையாக வைத்து அரசியல் செய்யும் திருமாவளவன் திராவிடத்தையும் திராவிடக் கட்சிகளையும் பிரித்துப் பார்க்கிறார். திராவிடக் கட்சிகளோடும் கட்சி சார்ந்த கொள்கைகளோடும் திருமாவளவனுக்கு விமர்சனம் இருக்கிறது. ஆனால் சமூகநீதியை கொண்டு வந்த திராவிடத்தோடு அவருக்கு விமர்சனம் இல்லை. பெரும்பான்மையானவர்களின் திராவிடம் பெரியாரோடு முடிந்துவிடும். திராவிடத்தின் கடைசி எல்லை பெரியார்தான். ஆனால் திருமாவளவன் திராவிடத்தை அயோத்தி தாசரிலிருந்து பார்க்கிறார். ஆனால் பெரியாரின் திராவிடத்தை எடுத்துக் கொள்கிறார்.

 
திருமாவளவனின் தமிழ் தேசியம் சாதி, மதமற்ற தமிழ் தேசியம். நந்தினி, கௌரி ஷங்கர் முதல் ஸ்வாதி வரை அனைவரையும் அரவணைக்கும் தமிழ் தேசியமாக இருக்கிறது.

தொடர்ந்து தமிழகத்தில் ஏதாவது பிரச்னைகள் ஏற்பட்டுக் கொண்டேயிருக்கின்றன. அந்தப் பிரச்சினைகள் குறித்து திருமாவளவனின் தலைமையிலான வி.சி.கவின் அறிக்கை கவனிக்கத்தக்கது. அந்தப் பிரச்சினை சார்ந்து வி.சி.கவின் நிலைபாடு. கொள்கை அடிப்படையிலும் வரலாற்று அடிப்படையிலும் அந்த நிலைபாடு இருக்கும். பின்னொரு நாளில் அந்த நிலைபாட்டில் மாற்றம் ஏற்பட்டால் அதற்கும் கொள்கை சார்ந்த தக்க காரணங்கள் இருக்கும்.

ஏனைய கட்சிகளும் தலைவர்களும் இருந்தாலும் கூட தலித்கள் வி.சி.கவையும் திருமாவளவனையும் தான் தங்களுடைய தலைமையாக பார்க்கிறார்கள்
; காரணம், ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஏதாவது பிரச்சினைகள் ஏற்படும்போதெல்லாம் களத்திற்கு சென்று குரல் கொடுத்தார் திருமாவளவன்.

சட்டப்படி அந்தப் பிரச்சினைக்கு என்ன தீர்வு காண வேண்டுமோ அதற்கான வழிகளை ஏற்படுத்தி கொடுத்தார். கண்டனங்கள் அறிக்கைளோடு நின்றுவிடாமல் தொடர்ந்து அடுத்தடுத்து இதுபோன்ற அசம்பாவிதங்கள் ஏற்படாமலிருக்க நடவடிக்கைகளை மேற்கொண்டார்.

சிறுபான்மையினர்களின் பிரச்சினையை திருமாவளவன் எடுத்து பேசுகிறார். இஸ்லாமியர்களும்  கிறிஸ்துவர்களும் அவரை நோக்கி செல்கிறார்கள். இதைப் புரிந்துக் கொண்ட சங்கப்பரிவார அமைப்புகள்
, வி.சி.கவில் இஸ்லாமியர்களும் கிறிஸ்துவர்களும் ஊடுருவி விட்டார்கள். விரைவில் திருமாவளவனை அவர்களிடமிருந்து மீட்போம் என்கிறார்கள்.

முஸ்லிம்களும் கிறிஸ்தவர்களும் திருமாவளவனை இழுத்துப் பிடித்திருக்கவில்லை. திருமாவளவனின் அரசியல் சிறுபான்மையினர்களை இழுத்துச் சென்று அங்கே விட்டிருக்கிறது. இழுத்த இழுப்புக்கெல்லாம் செல்லக் கூடியவரா திருமாவளவன்
? ஒரு வேளை இஸ்லாமியர்களும் கிறிஸ்துவர்களும் திருமாவளவனை விட்டு விலகினாலும் கூட திருமாவளவன் அவர்களை விட்டு விலகமாட்டார். அவர்களுக்கான அரசியலை தொடர்ந்து முன்னெடுப்பார்.


என்றும் சாமானிய மக்களின் குரலாய் ஒலிக்கும் திருமா அவர்களின் அரசியல்
, மக்களும் பிற கட்சிகளும் கவனிக்க வேண்டியவை.

Thursday, 5 October 2017

அனிதா மரணத்திற்குப் பின் தமிழக அரசியல்



கடந்த சில வாரங்களில் இரண்டு மரணங்கள் ஏற்பட்டிருக்கிறது. இரண்டு மரணங்களும் சமூகத்தில் பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியிருக்கிறது. மரணத்தை ஏற்றுக்கொண்ட இருவரும் பெண்கள். ஒருவர் அனிதா; நீட் தேர்வினால் மருத்துவ வாய்ப்பை இழந்த மாணவி. மற்றொருவர் கௌரி லங்கேஷ்¢; ஒடுக்கப்பட்ட மக்களுக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வந்த எழுத்தாளர்.

இந்த இரண்டு மரணத்தையும் சற்று கூர்ந்து கவனிக்க வேண்டும். அனிதாவின் மரணத்தை அரசியல்வாதிகளும் சமூக செயல்பாட்டாளர்களும் இது தற்கொலையல்ல; கொலை என்று வர்ணிக்கிறார்கள். இந்த இரண்டு கொலைகளுமே ஒரு புள்ளியிலிருந்து ஏவப்பட்டிருக்கிறது. கௌரி லங்கேஷை நேரடியாக வன்முறையில் இறங்கி சுட்டு கொன்றிருக்கிறார்கள். அனிதாவை சட்டத்தின் வாயிலாக கொன்றிருக்கிறார்கள்.

இதிலிருந்து அதிகார வர்க்கம் ஒன்றை தெளிவாக உணர்த்துகிறது. நாங்கள் நினைத்தால் சட்ட ரீதியாகவும் ஒருவரை இல்லாமல் ஆக்குவோம்; சட்டத்திற்கு முரணான ரீதியிலும் ஒருவரை இல்லாமல் ஆக்குவோம் என்பதை சுட்டிக் காட்டுகிறது. பா.ஜ.க ஆட்சிக்கு வந்தபிறகு இந்தியாவின் போக்கு இரண்டு விதமாக செயல்படுகிறது. ஒரு பக்கம் சட்ட ரீதியாக மக்களை இன்னலுக்கு உள்ளாக்குவது. மறுபக்கம் குண்டர்களை வன்முறையில் இறக்கி மக்களை அச்சத்தில் வைப்பது. இதுதான் கடந்த மூன்றாண்டுகளாக இந்தியாவில் நடந்து கொண்டிருப்பது.

சமூகநீதியின் அடிப்படையில் தமிழகம் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அந்த அஸ்திவாரத்தை உடைத்து எரிவதற்காகவே மக்கள் நலத் திட்டங்கள் என்கிற பெயரில் தொடர்ந்து தமிழகம் குறிவைக்கப்படுகிறது. பிற எந்த மாநிலங்களிலும் இதுபோன்ற எதிர்ப்புகள் வருவதில்லை என்று பா.ஜ.கவினர் குற்றம்சாட்டுகிறார்கள். ஒரே வித்தியாசம் தான். இங்கு பெரியார் இருந்தார். அங்கு இல்லை.

பெரியாரின் ஒட்டுமொத்த அரசியலும் சமூகநீதியை முன்னிறுத்தியே இருந்தது. அவரது ஒவ்வொரு அரசியல் அசைவுகளும் சமூகநீதிக்காகவே இருந்தது. காங்கிரஸில் சேர்ந்தார். சேருவதற்கு முன்பே அவர் வைத்த நிபந்தனை இடஒதுக்கீடு. பின்பு அதே கட்சியிலிருந்து விலகினார். அதற்கும் இடஒதுக்கீடு மறுக்கப்பட்டதே காரணம். அப்படியெல்லாம் பாடுபட்டு போராட்டங்கள் நடத்தி, பெற்ற இடஒதுக்கீடு அதிகாரவர்க்கத்திற்கு பெரும் இடியாக அமைந்தது.

மீண்டும் அதை ஒழித்துக் கட்டுவது சாதாரண காரியமல்ல. குறிப்பாக தமிழகத்தில் அதை நேரடியாக எதிர்க்க முடியாது. அதனால் தான் புதுப்புது திட்டங்களை கொண்டு வந்து அதன் வாயிலாக இடஒதுக்கீட்டின் பலனை நீக்குகிறார்கள். அனிதாவின் மரணம் தமிழகத்தின் பெரும் கரும்புள்ளியாக மாறிவிட்டது. அனிதா இறந்த நாள் முதல் இன்று வரை தொடர்ந்து  போராட்டங்கள் நடந்துக் கொண்டேயிருக்கிறது. தமிழகத்தின் அரசியலைப் பொறுத்த வரை சமூகநீதியை முன்னிறுத்தியே நகர்ந்திருக்கிறது. 

தி.மு.க, அ.தி.மு.கதான் சமூகநீதியை முன்னிறுத்தும் பிரதான கட்சிகள் என்ற பிம்பம் மக்களுக்கு மத்தியில் இருக்கிறது. காரணம், பெரியாரைத் தொடர்ந்து வந்த தலைவர்களாக இருப்பதால்தான். தி.மு.க, அ.தி.மு.கவின் முக்கியத் தலைவர்களான கலைஞர் மற்றும் ஜெயலலிதாவிற்கு பிறகு சமூகநீதி பற்றிய கேள்வி மக்களுக்கு மத்தியில் எழ ஆரம்பித்துவிட்டது. அதற்கேற்றாற்போல் நீட் தேர்வு கொண்டுவரப்பட்டவுடன் அனிதாவின் மரணம் சமூகநீதியை அசைத்துப் பார்த்துவிட்டது. 

பெரியாரில் ஆரம்பித்த சமூகநீதி அடுத்தடுத்த கட்டங்களில் தலைவர்கள் மாற்றங்கள் ஏற்பட்ட போதும் மக்களுக்கு மத்தியில் ஒரு சிறிய நம்பிக்கை இருந்தது. ஆனால் நீட் தேர்வு அமலாக்கப்பட்டவுடன் மக்களுக்கு திராவிட கட்சிகள் மீதிருந்த நம்பிக்கை பொசுங்கிவிட்டது. இந்த இடத்தில் தான் அனிதாவின் மரணம் முக்கியத்துவம் பெறுகிறது.

வழக்கம் போல் இல்லாமல் இந்த வருடம் பெரியாரின் பிறந்தநாள் வெகுவிமரிசையாக கொண்டாடப்படுவதற்கு காரணம், சமூகநீதி வீழ்ந்துவிடக் கூடாது என்பதே. சமூகநீதி வீழவில்லை என்பதை அடையாளப்படுத்துவதற்காகவே இந்த வருடம் பெரியாரின் பிறந்தநாள் பிரம்மாண்டமாக தமிழ்நாடு முழுவதும் கொண்டாடப்பட்டிருக்கிறது.

சமூகநீதியை அடிப்படையாகக் கொண்ட தி.மு.க, அ.தி.மு.க கட்சிகளைத் தாண்டி இன்று பல்வேறு கட்சிகள் உருவாகிவிட்டன. கடந்த பல ஆண்டுகளாக பல கட்சிகளின் கொள்கை கோட்பாடுகள் மக்களுக்கு பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியது. கவர்ச்சியாக பேசும் பல அரசியல்வாதிகளை வைத்து அந்தக் கட்சியின் கோட்பாடுகளை எடை போட ஆரம்பித்தார்கள் மக்கள். தே.மு.தி.கவிற்கு என்ன கொள்கையென்று இன்றுவரை பலரால் சொல்ல முடியவில்லை. 

அனிதாவின் மரணத்திற்கு பிறகு பல்வேறு கட்சிகளின் கொள்கைகள் விவாதத்திற்கு வந்துள்ளது. கட்சித் தலைவர்கள் இனம் காணப்படுகிறார்கள். அரசியல்வாதிகளின் சமூகநீதி சார்ந்த கருத்துக்களை விவாதத்திற்கு உட்படுத்தி தெளிவுபெற ஆரம்பித்துவிட்டார்கள் மக்கள்.

ஒரு கட்சியின் கொள்கை ஒரு வகையிலும் அந்தக் கட்சித் தலைவரின் செயல்பாடுகள் வேறு வகையிலும் இருக்கிறது. டாக்டர்.கிருஷ்ணசாமியின் கட்சிக் கொள்கைகள் வேறு. ஆனால் தற்போது டாக்டர்.கிருஷ்ணசாமி எடுத்திருக்கும் நிலைபாடு புதிய தமிழகம் கட்சியின் கொள்கைக்கு நேர் எதிரானது.

நீண்ட நாட்களாக தமிழ்த் தேசியம் குறித்த குழப்பங்களுக்கு தற்போது விடை கிடைத்துக் கொண்டிருக்கிறது. தமிழ்தேசியம் பேசுபவர்களுக்கும் தலித் சமூகத்திற்கும் மத்தியில் இருந்த கொள்கைச் சார்ந்த குழப்பங்கள் வெளிப்படையாக விவாதமாக்கப்பட்டிருக்கிறது. இயக்குனர். பா.இரஞ்சித் எழுப்பிய கேள்வியும் அதுதான். தமிழ்தேசியம் பேசுபவர்களில் பல கட்சிகள் இருந்தாலும் அவர்களுக்கு மத்தியில் உள்ள வித்தியாசங்களை எளிதாக காண முடிகிறது. கவர்ச்சியான பேச்சு மட்டுமே நல்ல அரசியலுக்கு வழிவகுக்காது.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி திருமாவளவன் பேசும் தமிழ்தேசியம் வேறு; நாம் தமிழர் கட்சி சீமான் பேசும் தமிழ் தேசியம் வேறு. மே 17 இயக்கம் பேசும் தமிழ்தேசியம் வேறு; நாம் தமிழர் கட்சி பேசும் தமிழ்தேசியம் வேறு.

சமூகநீதியற்ற தமிழ்தேசியம், சாதியை நூறு சதவீதம் எதிர்க்காத தமிழ்தேசியம் பாசிசத்தில் சென்று முடியும். தமிழர்கள்தான் தமிழ்நாட்டை ஆள வேண்டும் என்று பெரியார் சொன்னதன் அரசியல் வேறு. உர்து பேசும் முஸ்லிம்கள் தமிழர்கள் அல்ல என்பதில் தொடங்கி எல்லா தலைவர்களையும் தமிழை வைத்து எடைபோடும்வரை உள்ள போக்குகள் தீவிர தமிழ்தேசியம் என்கிற பெயரில் செய்யப்படும் பாசிசம்.

திருமுருகன் காந்தி உள்ளிட்ட 4 பேர் குண்டர் சட்டத்திலிருந்து விடுதலையானார்கள். விடுதலையானவுடன் நேராக சென்று பெரியாருக்கு மாலையணிவித்து மரியாதை செலுத்தினார்கள். அதைத் தொடர்ந்து அவர்கள் செய்தியாளர்களிடம் கொடுத்த பேட்டியில் தங்களை பெரியாரின் பேரப் பிள்ளைகள் என்று அடையாளப்படுத்திக் கொண்டார்கள்.

என் தங்கை, என் தம்பி, என் பிள்ளை, என் அக்காள், என் அப்பத்தா, என் பாட்டன், என் பெரியப்பா என்ற எல்லா உறவுகளும் சேரிவரை சென்றடைய வேண்டும். மேல்மட்டத்திலேயே தங்கக் கூடாது. நீண்ட நாட்களாக வெளிப்படையாக பேசப்படாமல் இருந்த இந்த விவகாரம் அனிதாவின் மரணத்தையொட்டி விவாதமாக்கப்பட்டிருக்கிறது.

மக்களுக்கு மத்தியில் நடக்கும் இந்த விவாதம் ஒரு இடத்தில் வந்து நிற்கிறது. மூன்றாவது அணி, நான்காவது அணியெல்லாம் அல்ல. இரண்டே அணி. சமூகநீதியை தூக்கிப் பிடிப்பவர்கள் ஒரு பக்கமும் சமூகநீதிக்கு எதிரானவர்கள் மறுபக்கமும் என்று அரசியலில் தெளிவு ஏற்படுகிறது. குழம்பிய குட்டையில் மீன் பிடிக்க நினைத்தவர்கள் அனைவருக்கும் பெரும் இடியாக அமைந்துவிட்டது.

சமூகநீதியை நிலைநாட்ட நினைப்பவர்கள் வெற்றி பெறுவார்கள். சமூகநீதிக்கு எதிரானவர்கள் ஹெச்.ராஜாவைப் போன்று படுதோல்வி அடைவார்கள். இந்தக் காலகட்டம் தமிழக அரசியலின் திருப்புமுனையாக வரலாற்றில் இடம்பெறும். தமிழக அரசியலும் தமிழக மக்களும் சுயப்பரிசோதனை செய்துக் கொண்ட காலமாக வரலாற்றில் இடம்பெறும். கலைஞர் மற்றும் ஜெயலலிதாவிற்கு பிறகு அடுத்து வரக் கூடிய தேர்தல், மக்களின் நிலைப்பாட்டை வெளிக்கொணரும். அந்த நிலைப்பாடு பாசிச கும்பலுக்கு திரும்ப எழ முடியாத அளவுக்கு பெரும் அடியாக விழும். தமிழக மக்களும் தமிழக அரசியலும் அனிதா மரணத்திற்கு முன், அனிதா மரணத்திற்கு பின் என்று பார்க்கும் அளவிற்கு மாற்றங்கள் ஏற்படும்.

தமிழகத்தைப் பொறுத்த வரை சமூகநீதி சாதாரணமானதல்ல.